India

“உச்சநீதிமன்றம் எங்களுடையது; ராமர் கோவில் கட்டுவோம்” என்ற உ.பி அமைச்சருக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம்!

அயோத்தி பாபர் மசூதி மற்றும் ராமர் கோவில் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு 22வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “எனக்கு மிரட்டல் வந்ததுள்ளது, நேற்று உச்சநீதிமன்ற வளாகத்தில் எனது உதவியாளர் தாக்கப்பட்டுள்ளார்” என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், இத்தகைய நிகழ்வுகள் ஏற்புடையது அல்ல. கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையில், “அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும், உச்சநீதிமன்றம் எங்களுடையது” உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் கூறியது தொடர்பான செய்திகளை அறிந்த நீதிபதிகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இதுபோன்ற கருத்துகள் எந்த தரப்பில் இருந்து வந்தாலும் அதனை உச்சநீதிமன்றம் உற்று நோக்கி வருகிறது எனவும் கூறினர்.