India

காஷ்மீர் நிலவரத்தை பதிவிட்ட ஷீலா ரஷீத் மீது தேசதுரோக வழக்கு... கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும், சமூக ஆர்வலருமான ஷீலா ரஷீத் ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது.

ஷீலா ரஷீத் தனது பதிவுகளில், இராணுவத்தினர் காஷ்மீர் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை தூக்கிச் செல்வதாகவும், மக்களை சித்ரவதை செய்வதாகவும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சமூக வலைதளங்களில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் எதிராக இவர் கருத்து பதிவிட்டு வருவதாகவும், இது மிகப்பெரிய தேசத்துரோக குற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 3ம் தேதி ஷீலா ரஷீத் மீது டெல்லி போலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ஜாமின் கோரி ஷீலா ரஷீத் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார் ஜெயின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பவன் குமார் பிறப்பித்த உத்தரவில், "குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷீலா ரஷீத்துக்கு இடைக்கால ஜாமின் வழங்குகிறேன். அவரை போலிஸார் கைது செய்யக்கூடாது. தேவைப்பட்டால் ரஷீத் போலிஸாருக்கு விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 5ம் தேதி நடக்கும்" எனத் தெரிவித்தார்.

நீதிபதியின் உத்தரவையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஷீலா ரஷீத் தெரிவித்துள்ளார்.