India

“பேங்க் மேனஜர் பேசுறேன், ஏ.டி.எம் எண்ணை சொல்லுங்க” - கால் செண்டர் நடத்தி மோசடி செய்த கும்பல் - உஷார்!

டெல்லியைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று போலி கால் செண்டர் நடத்தி, 220 பேரை ஏமாற்றி சுமார் 13 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 முக்கிய நகரங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்களின் சூட்சமம் என்ன?

தனி நபரின் மொபைல் எண்ணுக்கு தனித்தனியாக தொடர்ப்புக் கொண்டு, “ வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது. அதனை சரி செய்ய வங்கி கணக்கு விவரம் தாருங்கள்.” என்று கேட்கின்றனர். தங்களைப் பற்றிய தகவல்களை சரியாகச் சொல்கிறார்களே என நம்பி, வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கின்றனர். அந்த தகவல்களைக் கொண்டு போலி ஆவணங்களைத் தயார் செய்து பணத்தை சுருட்டுவதே இவர்களின் பாணி.

எப்படி சிக்கினர்?

கடந்த மே மாதம் டெல்லி கே.என்.கட்ஜு காவல் நிலையத்தில் 63 வயதான முதியவர், தன்னிடம் வங்கி மேலாளர் போன்று பேசி ஒருவர் 20 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார். பின்னர் போலிஸார் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணையை நடத்தி வந்தனர்.

அதன்பின்பு மோசடி செய்த கும்பலில் பிரபாத்குமார் என்பவரை வங்கியில் பணம் எடுக்கும்போது போலிஸார் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து போலி காசோலைகள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மோசடி கும்பலைச் சேர்ந்த 10 பேரை போலிசார் கைது செய்தனர்.

டெல்லி ஃபரிதாபாத்தில் ஜிதேந்தர் மற்றும் ராபின் மேத்யூ ஆகிய இரு நண்பர்களால் இந்த மோசடி தொடங்கப்பட்டதாகவும், காப்பீட்டு விற்பனை கால் செண்டரில் பணிபுரியும் போது அவர்கள் நண்பர்களாக இணைந்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு முதல் இவர்களி இருவரும் இணைந்து சொந்தமாக கால் செண்டர் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து மோசடி செய்து பணத்தைப் சுருட்டி வருகின்றனர் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

எச்சரிக்கை தேவை!

சைபர் மோசடி குறித்து வங்கிகளும், அரசும் தொடர்ந்து மக்களை எச்சரித்த வண்ணமே இருக்கின்றன. வங்கி மேனஜர் பேசுகிறேன், உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க வேண்டும், உங்கள் ஏ.டி.எம் எண்ணை தெரிவியுங்கள் என்று யாராவது தொலைபேசியில் அழைத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கிகள் ஒருபோதும் அப்படிப்பட்ட தகவல்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.