India

“அச்சுறுத்தும் புதிய மோட்டார் வாகனச் சட்டம்” 4 நாட்களில் ரூ.1.41 கோடி வசூல் வேட்டை : அதிர்ச்சி தகவல்!

புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான திருத்த மசோதா, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் 4 நாட்களில் ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் ரூ.1.41 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கிடைத்துள்ளது. மேலும் 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

முன்னதாக ஹரியானா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அவருக்கு 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஓட்டி வந்த வாகனத்தின் மதிப்பே 15 ஆயிரம் ரூபாய்தான் என்று இளைஞர் கவலை தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 38 ஆயிரம் ரூபாயும், அரியானாவில் டிராக்டர் ஓட்டுர் ஒருவருக்கு 59 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.