India

அரசை அசைத்துப் பார்த்த மேதா பட்கரின் உண்ணாவிரதம் : கோரிக்கைக்கு செவி சாய்த்த பா.ஜ.க அரசு

குஜராத் மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூடவும், அணையின் நீர் மட்டத்தை 138.68 மீட்டராக உயர்த்தவும் அம்மாநில அரசு முடிவு செய்தது.

குஜராத் மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெளியேற்றபட்ட மக்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் மேதா பட்கர் கடந்த மாதம் 25-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டம் சோட்டா பாத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை 5 பெண்களுடன் தொடங்கினார் மேதா பட்கர். ஆனால் தற்போது இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக பர்வானி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

9 நாட்களாக நீடித்த போராட்டத்தில் நேற்று மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் தலையிட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பினோய் விஸ்வம் எம்.பி., மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இதனையடுத்து நேற்று இரவு மாநில முதலமைச்சர் கமல் நாத் சார்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.சி.பெகர், மேதா பட்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த பேச்சு வார்த்தையில் அணையின் நீர்மட்டத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பெகர் கூறினார். இந்த உத்தரவாதத்தை அடுத்து மேதா பட்கர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். மேதா பட்கருடன் உண்ணாவிரதம் இருந்த அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தனர்.