India

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவிற்கு மாற்றம்? - வழக்கத்தை மீறிய நியமனத்தின் ரகசியம் என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள விஜயா கமலேஷ் தஹில் ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் முடிவெடுத்துள்ளதாக தி டெலிகிராஃப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இதற்கு மத்தியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே. தஹில்ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் 4வது பெரிய உயர் நீதிமன்றத்தில் இருந்து ஒரு தலைமை நீதிபதி மிகச்சிறிய உயர் நீதிமன்றத்துக்கு வழக்கமாக மாற்றப்படுவதில்லை. ஆனால், நாட்டில் உள்ள இரண்டு பெண் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் ஒருவராக உள்ள தஹில்ரமணி மேகாலயாவுக்கு மாற்றப்படுவதில் வேறு காரணம் ஏதும் இருப்பதாக கூறப்படுகிறது. தஹில்ரமணியின் இந்த பணியிட மாற்றம், குறிவைத்து நடத்தப்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மேலும், மேகாலயாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியோடு சேர்த்து மொத்தமே 3 நீதிபதிகள் தான் இருக்கின்றனர். தஹில்ரமணி மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுவதற்கான காரணத்தை கொலீஜியம் ரகசியமாகவே வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆக.,8ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் தஹில்ரமணி, மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். அப்போது, 2017ல் பில்கிஸ் பானோ பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள்தண்டனை கொடுத்து தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.