India

ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிபதிக்கு புதிய பதவி - மோடி அரசின் தகிடுதத்த வேலை!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுருக்கு மோடி அரசு புதிய பதவி வழங்கி மகிழ்வித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், தீர்ப்பை தள்ளிவைத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி அதாவது, தான் ஓய்வு பெறுவதற்கு சரியாக இரண்டு நாட்கள் முன்னதாக இந்த வழக்கின் தீர்ப்பை அவசர அவசரமாக வழங்கினார் சுனில் கவுர். அதில், “இதுபோன்ற கடுமையான பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கு முன்ஜாமின் வழங்கும் முறையை சட்டத்திலிருந்து நீக்கவேண்டும்” எனவும் கடுமை காட்டினார் சுனில் கவுர்.

அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 21ம் தேதி சுவர்தாண்டிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள். அதைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்துள்ளது.

இந்நிலையில், நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சுனில் கவுருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் பதவி வழங்கியுள்ளது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு.

சுனில் கவுர் ஏற்கெனவே, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நேஷனல் ஹெரால்ட் வழக்கில் விசாரிக்க அனுமதி வழங்கியவர். மேலும், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதூல் பூரிக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முன்ஜாமினை மறுத்து உத்தரவிட்டதும் சுனில் கவுர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, காங்கிரஸுக்கு எதிரான போக்கைத் தொடர்ந்து கையாண்டு வரும் நீதிபதி சுனில் கவுருக்கு புதிய பதவி வழங்கி மகிழ்வித்துள்ளது பா.ஜ.க அரசு. சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை தனது பழிவாங்கும் நடவடிக்கைக்குப் பயன்படுத்துவதைப் போலவே, தன்னாட்சி பெற்ற நீதித்துறையையும் பா.ஜ.க அரசு கைப்பற்றிவிட்டது தெளிவாகி இருக்கிறது.