India

வங்கிகளில் நடைபெறும் மோசடி 73.8% அதிகரிப்பு; 71 ஆயிரம் கோடி இழப்பு - ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் இயங்கி வரும் வங்கிகளில் நடைபெற்ற பண மோசடி சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்துறை வங்கிகளில் மோசடி சம்பவங்கள் அதிகம் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்கிகளில் ரூபாய் 100 கோடிக்கு மேல் நடந்த மோசடிகள் குறித்த அறிக்கையை தயார் செய்வதற்கே நான்கரை ஆண்டுகள் ஆகியுள்ளது. அறிக்கையை தாமதமாக அளித்த வங்கிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

கடந்த 2018 – 2019ம் ஆண்டு வரையிலான 55 மாதங்களில் ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட தொகை மொத்தமாக சேர்த்தால் ரூபாய் 52 ஆயிரத்து 200 கோடியாகும். ரூபாய் 1 லட்சத்திற்கும் குறைவாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை வெறும் 0.1 சதவீதம் தான். கடந்த ஆண்டைக் காட்டிலும் 2018 – 2019ம் ஆண்டு வங்கிகளில் நடைபெற்ற மோசடிகளினால் ஏற்பட்ட இழப்பு 73.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 2019ம் நிதி ஆண்டில் வங்கி மோசடி தொடர்பாக, 6 ஆயிரத்து 801 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் ரூபாய் 71 ஆயிரத்து 542 கோடி ரூபாய் இழப்பும், 2017-2018ம் ஆண்டில் 5 ஆயிரத்து 916 மோசடிப் புகார்களினால் ரூபாய் 41 ஆயிரத்து 167.04 கோடி ரூபாயும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்டர்நெட், டெபிட் கார்டுகள் மற்றும் டெபாசிட் தொடர்பாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 0.3 சதவிதம் மட்டுமே. அதிக மோசடி நடைபெறுவதில் தனியார் வங்கிகள் முதலிடத்திலும், வெளிநாட்டு வங்கிகள் இரண்டாவது இடத்திலும், பொதுத்துறை வங்கிகள் அடுத்த இடத்திலும் உள்ளன.

இந்த மோசடிகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.