India
விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 சன்மானம்- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையில் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு, "சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். அவர் பெருந்தன்மையுடன் சபாநாயகர் இருக்கையில் இருந்து வெளியேற வேண்டும். தார்மீக அடிப்படையில் அவர் சபாநாயகராக இருக்கும் தகுதியை இழந்துள்ளார் என கூறினார். அதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டமன்ற விதிகளின்படிதான் சபை நடத்தப்படுகிறது என்றார்.
இதையடுத்து அன்பழகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேசினர்.
தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை வாசித்துக்கொண்டிருந்தார். எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவை தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து, சபை மாண்பை குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் செயல்படக்கூடாது. அப்படி செயல்பட்டால் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சபை காவலர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக சபையிலிருந்து வெளியேற்றினர். இன்றைய சட்டசபைக்கூட்டத்தை எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.
தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த முதலமைச்சர் நாராயணாசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்த போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.
முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த ரூ. 8, 452 கோடிக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் வருமாறு:-
*புதுச்சேரியில் விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 சன்மானம்
*புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்
*மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.2,500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
*காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நாராயணசாமி
* சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ஒரு கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்.
*செப்டம்பர் 1ந் தேதியில் இருந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
*புதுச்சேரி பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் யோகா மையம் உள்ளிட்ட வாழ்வியல் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* மதுபான விலையை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!