India

“ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; அதிகரித்த பெட்ரோல் - டீசல் விலை!” இந்திய பொருளாதாரத்தின் இன்றைய அவலநிலை?

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலை வாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

குறிப்பாக, தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவினால் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐ.டி துறைகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அதனால் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பெரும் பங்கினை வகிக்கும் வங்கிகளின் நிலைமையும் மோசமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி, பொதுமக்களை நேரடியாக தாக்கும் வகையில் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளது. நடுத்தர மக்கள், வியாபாரிகள் என தினமும் உயரும், விலை உயர்வினால் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.04 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாட்டின் உள்ள அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாக அமைகின்றது.

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று, இந்த ஆண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 59 பைசா குறைந்து 72.02 ஆக இருந்தது. டாலருடனான சீனாவின் கரன்சி யுவான் மதிப்பும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.

அதன் தாக்கம் இந்திய ரூபாய் மதிப்பும் சரிவை சந்தித்தது. பங்குச்சந்தைகளின் புள்ளிவிவரப்படி சமீபகாலத்தில் 971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவு, இந்தியாவில் இருக்கும் பெரும் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு முதலீடு செய்யும் நிலைமைக்குச் சென்றுள்ளனர். இதனால் இந்திய பொருளாதாரம் மேலும் பாதிப்புகளை சந்திக்கும் என்பது தெளிவாகிவிட்டது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.