India

ஊசி போடுவதாக அழைத்துச் சென்று சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களே மிக அதிகமாக நிகழ்ந்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த உ.பி-யில் ஆளும் பா.ஜ.க அரசு எந்த நடவடிக்கையையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை.

அவ்வகையில், ஹத்ராஸில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 17 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ம் தேதி அன்று, சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்த மருத்துவமனை ஊழியர் சிவானந்தன் என்பவர், சிறுமிக்கு ஊசி போட வேண்டும் என கீழே உள்ள அறைக்கு அழைத்துள்ளார்.

தனது அம்மாவை உடன் அழைத்து வருவதாகக் கூறிய சிறுமியிடம், ஊசி தானே என்றுச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளான் சிவானந்தன். அங்கு, சிறுமிக்கு மாத்திரை கொடுத்து மயக்கமடைய வைத்ததும், சிவானந்தனும், உடன் பணிபுரியும் விஷாலும் சேர்ந்து சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.

மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த சம்பவம் பற்றி தனது தாயிடம் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி. இதனையடுத்து, போலிஸில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரை அடுத்து, பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்களை கைது போலிஸார் செய்துள்ளனர்.

மருத்துவமனைக்குள்ளேயே வைத்து, சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் அப்பகுதியில் இருப்போரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.