India

“மோடி ஆட்சியில் கவலைக்கிடமான நிலையில் இந்திய வங்கிகள்”: அமெரிக்க நிதி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலை வாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன. குறிப்பாக தற்போது ஏற்பட்டிற்கும் பொருளாதார சரிவினால் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐ.டி துறைகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அதனால் வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பொருளாதாரத்தில் பெரும் பங்கினை வகிக்கும் வங்கிகளின் நிலைமையே மோசமாகிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி வங்கிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக ‘புளூம்பெர்க்’ (Bloomberg) என்ற அமெரிக்க நிதி நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 7 வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் புளூம்பெர்க் அறிக்கையில் “இந்தியாவில் உள்ள வங்கிகள் வாராக் கடன் பிரச்னையை மிகப்பெரிய அளவில் சந்தித்து வருகின்றன. மேலும் பல வங்கிகள் கொடுத்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் பெற முடியாத சூழலில் தான் வர்த்தக நிலைமை உள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்திய வங்கிகளின் எதிர்காலம் கவலைக்கிடமாக மாறும்” என்றும் எச்சரித்துள்ளது.

Bloomberg

மேலும் “இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால் வங்கிகளின் சொத்து மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதனால் வங்கிகள் புதிய நிதி திரட்டும் முயற்சிகளையும் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்று புளூம்பெர்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள, மோசமான நிலையிலுள்ள இந்திய வங்கிகளின் பட்டியலில், ‘Yes Bank’ வங்கியின் பங்குகள் ஒருவருடத்தில் சுமார் 70 சதவிகிதம் சரிந்து முதல் இடத்தில் உள்ளது. 60% சரிந்து இரண்டாவது இடத்தில் ஐடிபிஐ வங்கியும், 52.16% சரிந்து மூன்றாவதாக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் உள்ளன.

அவற்றையடுத்து பாங்க் ஆப் இந்தியா, ஆர்பிஎல் பாங்க் லிமிடெட், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியெண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த செய்தி பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.