India

“இங்க இருந்த ஊரு எங்க?” : தெலங்கானாவில் காணாமல் போன ‘அத்திப்பட்டி’கள்!

அஜித் நடித்த ‘சிட்டிசன்’ படத்தில் ‘அத்திப்பட்டி’ என்ற கிராமமே வரைபடத்தில் இருந்து காணாமல் போனதாக காட்சிகள் இடம்பெறும். தற்போது, தெலங்கானா மாநிலத்தில் 460 கிராமங்கள் அவ்வாறு வரைபடத்தில் காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலம் 33 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் பிரிக்கப்படுவதற்கு முன்பு, தெலங்கானா பகுதியில் இருந்த 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு குறிப்பேட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 2021ம் ஆண்டிற்கான மக்கட்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகமும், மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகமும் 2011 மக்கட்தொகை விபரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் தெலங்கானாவில் இருந்து பல பகுதிகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாயமான கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து பெற்று வந்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காணாமல் போன கிராமங்களில் 36 கிராமங்களின் பெயர்கள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது அதிகாரிகளை மேலும் அதிரவைத்துள்ளது.

14 மாவட்டங்களில் 460 கிராமங்கள் வரைபடத்தில் காணாமல் போயிருக்கின்றன. இத்தனை கிராமங்கள் மாயமாகி இருப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தெலுங்கானா அரசிடம், மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கிராம எல்லை வரையறையின் போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக வருவாய் அதிகாரிகள் அந்த கிராமங்களின் பெயர்களை விட்டுவிட்டதாக சில அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பல கிராமங்கள் அரசின் குறிப்பேடுகளில் இல்லாத விஷயம் அதிகாரிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.