India

ஜி.எஸ்.டி காரணம் - பிஸ்கட் விற்பனை சரிவால் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது ’பார்லே’ !

மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிவிட்டு வழக்கம் போல் மக்களின் வரிப்பணத்தை சுரண்டுவதற்கான வேலைகளில் மட்டும் ஈடுபட்டு வருகிறது.

பா.ஜ.கவின் தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பு நீக்கம் , முறையற்ற ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் படிப்படியாக சரிந்து வருகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி இழுத்து மூடப்படும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. பெரும் நிறுவனங்களும் இதிலிருந்து தப்பிக்கவில்லை.

ஆட்டோ மொபைல், ஜவுளி, ரியல் எஸ்டேட் என்ற வரிசையில் பல துறைகளில் முதலீடு செய்துவிட்டு, லாபகரமான தொழில் நடத்த முடியாமல் நிறுவனங்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார மந்த நிலையால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வகையில், உணவுத் துறையையும் விட்டு வைக்கவில்லை இந்த பொருளாதார மந்தநிலை.

“5 ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட்டை கூட விற்பனை செய்வது கடினமாக உள்ளது.” என பிரபலமான பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா நிறுவனத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரிட்டானியாவை அடுத்து பார்லே நிறுவனமும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், " பிஸ்கட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரி 12ல் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பிஸ்கட்டுகளின் விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், விற்பனை சரிந்துள்ளது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எந்த ஒரு பொருளாதார நெருக்கடியும் ஏற்படவில்லை என மோடி அரசு, எப்பொதும் போல் கபட நாடகம் ஆடி வருகிறது. ஆனால் மக்களும், முதலீட்டாளர்களும், சிறு குறு வணிகர்களும் வழக்கம் போல் இந்த அரசின் செயல்பாடுகளால் ஏமாற்றமடைந்து வருகின்றனர். இது ஏதோ தொழில்துறைக்கு மட்டும் ஏற்பட்ட பாதிப்பல்ல. இதன் தாக்கம் மக்களாகிய நம் தலையில் தான் விடியும் என்பது மறுக்க முடியாத எச்சரிக்கை.