India

காதலியுடன் வாழ்வதற்காக, அவரது கணவருக்கு 71 ஆடுகளை இழப்பீடாகக் கொடுத்த வாலிபர் : உ.பி.யில் விநோதம்!

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் சீமா என்பவர் தனது கணவர் ரமேஷுடன் வாழ விருப்பமின்றி அதே ஊரைச் சேர்ந்த உமேஷ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இதனால், முதல் கணவரான ரமேஷுக்கு சீமா இழப்பீடு வழங்கவேண்டும் என ரமேஷின் தந்தை கிராம பஞ்சாயத்தில் முறையிட்டார்.

இதைத்தொடர்ந்து சீமா, உமேஷ் ஆகியோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீமா, தனது கணவருடன் வாழ விருப்பமில்லை எனவும் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது காதலர் உமேஷுடன் வாழவே தான் விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்கு இழப்பீடாக உமேஷ் வளர்த்துவரும் 142 ஆடுகளில் பாதியான 71 ஆடுகளை ரமேஷுக்கு வழங்கவேண்டும் என பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, சீமா, உமேஷ், ரமேஷ் ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. காதலன் உமேஷ் தான் வளர்க்கும் ஆடுகளில் சரிபாதியான 71 ஆடுகளை சீமாவின் கணவர் ரமேஷுக்கு பஞ்சாயத்தார் முன்னிலையில் வழங்கினார். இதனால், சீமா உமேஷுடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, உமேஷின் தந்தைக்கு இந்த முடிவு பிடிக்காததால், தங்களது ஆடுகளை, சீமாவின் கணவர் ரமேஷ் கடத்திச் சென்றுவிட்டதாக போலிஸாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.