India

தினமும் சாப்பிடுவதற்கு லட்டு மட்டும்தான் : தயவு செய்து எனக்கு விவாகரத்து கொடுங்கள் என குமுறிய கணவன் !

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் விவாகரத்து கேட்பது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரச் சொல்லி மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் விநோதமான வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது, தங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தனது உடல்நிலையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தனது உடல்நிலை சீராவதற்காக மனைவி ஒரு மந்திரவாதியை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மந்திரவாதி, உன் கணவரை காலை 4 லட்டுகளும், மாலை 4 லட்டுகள் என தினமும் 8 லட்டுகளை மட்டும் சாப்பிட்டு வரச் சொல். இடையில் எந்த உணவும் தரக் கூடாது என கூறியுள்ளார்.

இதன்படி, நாள்தோறும் வெறும் லட்டுகளை மட்டுமே தனக்கு சாப்பிட அளித்து வந்ததால் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றுள்ள கணவன், விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட குடும்பநல நீதிமன்றம், கணவன்-மனைவி இருவருக்கும் முதலில் கவுன்சிங் அளிக்க உத்தரவிட்டது.

கவுன்சிலிங் அளித்த பின்னர் ஆலோசகர் கூறுகையில், “இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பெண் அதி தீவிரமாக மூட நம்பிக்கையை பின்பற்றுகிறார். லட்டு சாப்பிட்டால் குணமாகும் என்பதாலேயே கொடுத்தேன் எனக் கூறுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மூட நம்பிக்கைகளை மிகவும் தீவிரமாக பின்பற்றுவதால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் ஆளாவதாகவும் பலர் குற்றஞ்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.