India

முதல் நாள் சிறந்த காவலர் விருது... மறுநாளே லஞ்ச வழக்கில் கைது : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட கான்ஸ்டபிள்!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சுதந்திர தின விழாவில் சிறந்த காவலர் விருது வாங்கிய மறுநாளே லஞ்ச வழக்கில் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதி ரெட்டி, மெஹபூப் நகர் ஐ டவுன் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் சுதந்திர தினத்தன்று சிறந்த காவலருக்கான விருதை அமைச்சரின் கைகளில் பெற்ற இவர் அடுத்த நாளே லஞ்ச வழக்கில் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.

மெஹபூப் நகர் ஐ டவுன் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் திருப்பதி ரெட்டி, ரமேஷ் என்கிற மணல் லாரி உரிமையாளரிடம், லஞ்சம் கேட்டு நச்சரித்துள்ளார். மணல் ஏற்றுவதற்கான போதிய ஆவணங்கள் வைத்திருந்தும், ரமேஷிடம் புகார் பதிவு செய்துவிடுவேன் என மிரட்டி ரூ. 17,000 லஞ்சம் கேட்டுள்ளார் திருப்பதி ரெட்டி.

இதையடுத்து, லஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்ட ரமேஷ், லஞ்ச ஒழிப்பு போலிஸில் புகார் தெரிவித்தார். ரமேஷின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனை மேற்கொண்டதில், கான்ஸ்டபிள் திருப்பதி ரெஅட்டி, ரமேஷிடம் லஞ்சமாக 17,000 ரூபாயைப் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சிறந்த தாசில்தாராக தேர்வான அதிகாரி வீட்டில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.93 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 400 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.