India
“மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களின் அன்பிற்குத் தலைவணங்குகிறோம்” : கேரள முதல்வர் நெகிழ்ச்சி!
கனமழையாலும், பெரு வெள்ளத்தாலும், துயருற்று வரும் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், உதவிடும் தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று, கேரள மக்களுக்கு உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது செய்தியில், “கேரளாவில் கனமழையிலும், பெரு வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 83 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள், 60 பேர் வரை காணாமல் போய் இருக்கிறார்கள். சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும் இத்துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மக்களுக்கு உதவிடும் முயற்சிகளை தி.மு.க முன்னெடுக்கிறது. எனவே, பொதுமக்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான நிவாரணப் பொருட்களை தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்திடக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் அளித்த நிவாரணப் பொருட்கள் வாகனங்களில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கிருக்கும் தி.மு.க செயல் வீரர்கள் அவற்றை பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய வகையில் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த செயற்கரிய உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக தி.மு.க தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களைச் சந்தித்த தி.மு.க தலைவரை, அண்டை மாநில மக்களின் துயர் தாளாமல், சிறப்பாக நிவாரணப் பணிகளை முன்னெடுத்ததற்காகவும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!