India

“அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் சி.பி.ஐ.,யின் செயல்பாடு ஏன் இத்தனை மோசம் ..? ” : ரஞ்சன் கோகாய் கேள்வி !

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் சிபிஐ.,யின் செயல்பாடு மோசமாக உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அந்த அமைப்பின் முதல் இயக்குநர் டி.பி.கோலி நினைவகத்தில் நேற்று நடைபெற்ற 18வது ஆண்டு கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், தனக்கான சிறப்பான இடத்தை உருவாக்கிக் கொண்ட சில புலனாய்வு அமைப்புக்களில் ஒன்றாக உள்ளது சிபிஐ. அரசியல் தொடர்பில்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ நன்றாக வேலை செய்கிறது. ஆனால், அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் சிபிஐ.,யின் செயல்பாடு மோசமாக உள்ளது.

பல உயர்மட்ட மற்றும் அரசியல் ரீதியான முக்கிய வழக்குகளில் நீதித்துறையின் தரத்தை சிபிஐ.,யால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் சிபிஐ.,யின் நம்பிக்கையையும், கட்டமைப்பையும் பாதித்துவிடும். எந்தவொரு பொது நிறுவனத்தின் வெற்றியைக் காட்டிலும் தோல்விதான் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

சிபிஐ.,யின் முக்கிய அம்சங்களை அரசின் ஒட்டுமொத்த நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து விலக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆடிட்டர் ஜெனரல், தேசிய தணிக்கையாளர் ஆகியோருக்கு இணையான சட்ட ரீதியான அந்தஸ்து சிபிஐ.,க்கு அளிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.