India

“காஷ்மீர் விவகாரத்தில் இராணுவத்தை இறக்க விரும்பவில்லை” - பாகிஸ்தான் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவுகளை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

மோடி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்து, எல்லை போக்குவரத்து சேவையை நிறுத்தியது, வாகா எல்லையை மூடியது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அரசு. காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா உட்பட உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தற்கு எதிராக இராணுவத்தை களமிறக்க பாகிஸ்தான் எந்த திட்டமும் மேற்கொள்ளவில்லை. மாறாக, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவுமே நடவடிக்கை எடுப்போம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா உடனான தூதரக உறவு முறிக்கப்பட்டது குறித்து சீனாவிடம் ஆலோசனை நடத்துவதற்காக விரைவில் சீனா செல்ல இருப்பதாகவும் குரேஷி தெரிவித்துள்ளார்.