India

மோடி அரசின் தவறான கொள்கையால் ஆட்டோமொபைல் துறையில் வர்த்தக சரிவு: 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!

இந்திய தொழில் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு துறை. இந்த துறையில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

2017ம் ஆண்டு ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தன. ஆனால் 2018ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்தள்ளது. இதற்கு பா.ஜ.க ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டுவந்த ‘எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை’ திட்டமே காரணம் என பரவலான கருத்து நிலவுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து 16 மாதங்கள் கடுமையான விழ்ச்சியை நோக்கி ஆட்டோமொபைல் துறை செல்கிறது. எலெக்ட்ரிக் வாகனக் கொள்கைத் திட்டத்தின் படி 2030ம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் எலெக்ட்ரிக் வாகனத்தை மட்டுமே இயக்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

அதனால் புதிய முதலீடுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனத் திட்டத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிக முதலீடு ஒரு புதிய துறைக்கு திடீரென அதிகரிக்கிறது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே இயக்கம் முடிவு என்றால், பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான ஆர்வம் மக்களுக்கு குறைந்துவிடும். இது நிதர்சனமான உண்மையும் கூட. அதனால் சந்தையில் அந்த வாகனங்களின் தேவை இல்லாமலும் போகும். அதனால் ஆட்டோமொபைல் துறையில் மூதலீடு செய்வதற்கான ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுசூகி, மகிந்திரா அண்ட், மகிந்திரா நிறுவன பங்குகள் 20 சதவீத அளவிற்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 2019ம் ஆண்டு மே மாதம் வரை சுமார் 42 பில்லயன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 905 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடப்பு நிதியாண்டில் 18.4 சதவீத அளவிற்கு வாகனப் விற்பனை எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கான வர்த்தக பேரிழப்பு என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை கையில் எடுத்துள்ளனர். இதனால் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, இந்திய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு (Automotive Component Manufacturers Association of India-ACMA) சார்பில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆட்டோமொபைல் துறைக்கு மட்டும் இழப்பு என்று பார்க்கவேண்டாம், இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 50 சதவீதத்தைப் பாதிக்கும். எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை மீது அரசுக்குத் தெளிவான புரிதல் இல்லை. அதனால் தான் ஆட்டோ மொபைல் துறை முடங்கியுள்ளது. இந்த விழ்ச்சியால் நாட்டில் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். இதற்கு உடனடி தீர்வு ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை குறைப்பதுதான். அதுவும் மிகப் பெரிய அளவில் குறைப்பதுதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.