India

ஜம்மு - காஷ்மீரில் என்ன நடக்கப்போகிறது என்பதை சொல்ல மறுக்கிறார்கள் : உமர் அப்துல்லா குற்றச்சாட்டு !

ஜம்மு - காஷ்மீரில் பல்லாயிரக் கணக்கான துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் காஷ்மீரில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருந்தது.

ஆனால், அமர்நாத் யாத்திரைக்கு வரும் மக்கள் மீது தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து யாத்திரையை ரத்து செய்தது மத்திய அரசு. மேலும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் உடனடியாக வெளியேறுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. மத்திய பா.ஜ.க அரசு ஜம்முவை தனி மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.

இதற்கிடையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் உமர் அப்துல்லா, “ஜம்மு - காஷ்மீரில் என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. ஏதோ நடக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தற்போது என்ன சூழல் உள்ளது என்பது அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. காஷ்மீரில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் சொல்ல மறுக்கிறார்கள்.

மேலும் சட்டம் 35 ஏ மற்றும் 370 ஆகிய சட்டங்களை ரத்து செய்யப்போவதாகவும், மாநிலத்தையே மூன்றாக பிரிக்கப் போகிறார்கள் என்ற வதந்திகளும் பரவுகின்றது. இந்த தகவலை ஆளுநரிடமும் தெரிவித்துள்ளோன்'' இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்தும், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது, என்ன தேவை எழுந்துள்ளது. இதுகுறித்த நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும். மேலும் மக்கள் அச்சப்படாத வகையில் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.