India

உயர்கல்வியில் சிறந்த நகரங்கள் பட்டியலில் 115 இடத்தில் சென்னை! கல்வியில் பின்னுக்குச் சென்ற தமிழகம்?

உலக அளவில் உயர்கல்வியில் சிறந்த விளங்கும் நகரங்கள் குறித்த சர்வதேச பட்டியல் வெளியாகிள்ளது. கியூ.எஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் - Quacquarelli Symonds) என்ற தனியார் நிறுவனம் இங்கிலாந்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் உலகில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும். அதில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிடும். கடந்த 15 ஆண்டுகளாகக் கல்வி நிறுவனங்கள் குறித்த தரவரிசை பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அதன் படி இந்த ஆண்டும் உயர்கல்வியில் சிறந்த விளங்கும் நகரங்கள், என்ற தலைப்பில் தரவரிசை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 120 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் லண்டன் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. டோக்கியோ இரண்டாம் இடத்தையும், மெல்போர்ன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த அறிக்கையில் இந்தாண்டு இந்தியாவின் நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு மும்பை மட்டும் தான் இடம் பெற்றது. ஆனால் இந்தாண்டு மும்பையுடன் சேர்த்து சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

120 நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் 81வது இடத்தில் பெங்களூரும், 85வது இடத்தில் மும்பையும், 113வது இடத்தில் டெல்லியும், கடைசியாக 115வது இடத்தில் சென்னையும் உள்ளது.

ஒட்டுமொத்தமாகவே 120 நகரங்கள் தான். இதில் சென்னை 115 என்றால், கடைசி வரிசையில் ஒட்டிக்கொண்டு இருப்பதாகவே பார்க்கப்படுக்கிறது. என்னதான் நான்கு இடங்களைப் பெற்றது மகிழ்ச்சி என்றாலும், தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டது கவலைக்குரிய ஒன்றே என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுநாள் வரையும் தமிழகம், மருத்துவ படிப்பு மற்றும் இதர கல்வியில் முன்னேறிய நகரம் என்று அறியப்படுகிறது. அதிக கல்வி நிலையங்களை உருவாக்கிய மாநிலமாகவும் தமிழகம் இருந்துள்ளது.

குறிப்பாகச் சென்னை போன்ற நகரங்களில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது எப்படி சென்னை கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது என்பதை தான் நாம் ஆராய வேண்டி இருக்கிறது. எதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலைத் தாயார் செய்தார்கள் என்று பார்த்தோமானால் காரணம் நமக்கு புரியும்.

கியூ.எஸ் அமைப்பு ஆறு அடிப்படைக் காரணங்களை முன்வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில், அந்த நகரத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் கணக்கிடப்படுகிறது.

அடுத்ததாக, கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழங்கும் சலுகை, கல்வித் தரம் ஆகியவை பார்க்கப்படுகிறது. படித்து முடித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதா? எந்த அளவில் உள்ளது?, மாணவர்கள் கல்விக்குச் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ற கல்வி அவர்களுக்கு வழங்கப்படுகிறதா? மாணவர்களிடம் இருந்து பெறும் கருத்துக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் மாணவர்கள் கல்விக்காகச் செலவிடும் தொகை, வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் கருத்து இவை மூன்றும் சென்னை பட்டியலில் பின் தங்க காரணமாக இருந்திருக்கிறது. கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றாலும் நிர்வாகத் திறனற்ற அரசு, வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அக்கறையின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.