India

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாததால் தீ வைக்கப்பட்ட முஸ்லிம் சிறுவன் பலி - உடலை லாரியில் கொண்டு சென்ற அவலம்

பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த நாள் முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர்கள், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பரவலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்து மதத்தை திணிக்கும் வகையில் ஜெய்ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை நடத்தும் இந்துத்வா கும்பலின் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அது போன்ற தாக்குதல்களால் அப்பாவி மக்கள் தங்கள் உயிரையும் இழக்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த திங்களன்று (ஜூலை 29), உத்தர பிரதேச மாநிலத்தின் சந்தாலி மாவட்டத்தில் 15 வயதுடைய இஸ்லாமிய சிறுவனை கடத்தி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட கட்டாயப்படுத்தியுள்ளது 4 பேர் கொண்ட இந்துத்வா கும்பல். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60% தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் "என்னை 4 பேர் கடத்தி ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி வற்புறுத்தினர். அதற்கு மறுத்ததால் என் மீது தீ வைத்தனர்" என போலிஸிடம் தெரிவித்துள்ளானர்

அதுவே அந்த சிறுவன் பேசிய கடைசி வார்த்தை. மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் முகமது காலித் உயிரிழந்தார்.

சிறுவனின் மரணம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பின் நடந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் மரணமடைந்ததை அடுத்து உடற் கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சிறுவனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட வழங்க மறுத்துள்ளது அந்த அரசு மருத்துவமனை நிர்வாகம். இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்தால் தன் மகனை இழந்த தந்தை, வேறு வழியின்றி, சிறுவனின் உடலை மினி லாரியில் எடுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது. இது தான் இந்நாட்டில் உங்கள் தலை விதி, என சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில் மோடி அரசும், காவி பயங்கரவாதிகளும் விடுத்துள்ள எச்சரிக்கையாக தான் இந்த சம்பவத்தை நாம் பார்க்க வேண்டி உள்ளது.