India

ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் உண்மையை மறைக்கிறது அப்பல்லோ மருத்துவமனை : ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதையோ மறைக்கும் நோக்கத்தில் விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை தடைகோரியிருக்கிறது என ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தி வந்தது. ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கேட்டு அப்பல்லோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஏற்கனவே விசாரணைக்கு அழைத்த மருத்துவர்களை மீண்டும் மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு அழைப்பதால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது எனவும் தெரிவித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை பெற்றது அப்பல்லோ நிர்வாகம். இந்த இடைக்காலத் தடை இரண்டு முறை நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது என உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் மனுவில், ஏதோ உள்நோக்கத்தோடு, எதையோ மறைக்கும் நோக்கத்தில் மருத்துவர்களை விசாரணைக்கு அனுப்ப அப்பல்லோ நிர்வாகம் மறுக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.

மேலும், அப்பlலோ மருத்துவர்கள் மற்றும் நிர்வாகம் மீது ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டுவிடுமோ என அஞ்சி விசாரணைக்கு தடை கோருகின்றனர். எனவே ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.