India

“பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்” - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை!

நாடு முழுவதும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்தக் குற்றங்களில் சிறுமிகளே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாலியல் வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019 ஜனவரி 1 முதல் ஜூன் 30ம் தேதி வரையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 24,212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதில், வெறும் 6,449 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்ற அமர்வை அமைத்து விரைந்து தீர்வு காணவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மத்திய அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில், போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் இரண்டு நீதிமன்றங்கள் டெல்லியில் ஏற்கனவே உள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் வகையில் அடுத்த 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியில் இருந்து செயல்பட வேண்டும்.

இந்த உத்தரவு தொடர்பாக அடுத்த 4 வார காலத்திற்குள் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி அளிப்பதில் ஏற்படும் தாமதத்தை மன்னிக்க முடியாது எனத் தெரிவித்தார். மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விசாரிக்கும் முறை கருணையுடன் இருக்கவேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

இறுதியாக போக்ஸோ வழக்குக்கு தனி நீதிமன்றம் கோரிய மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.