சந்திரயான் - 2
India

சந்திரயான் 2 : வெற்றிக்கு காரணமான 2 பெண் விஞ்ஞானிகள்! யார் இவர்கள்?

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை சுமார் 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்திருந்தது.

இது, கடந்த ஜூலை 15 அதிகாலை 2.51க்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஆயத்தமானது. ஆனால் விண்ணில் ஏவுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தற்காலிகமாக சந்திரயான் 2 திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கோளாறுகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு நேற்று (ஜூலை 22) பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது.

உலகமே அன்னார்ந்து பார்க்கும் நிகழ்வாக உள்ள சந்திரயான் 2 திட்ட வெற்றியின் பின்னணியில் ரிதி கரிதால் மற்றும் வனிதா முத்தையா ஆகிய இரண்டு பெண்மணிகளின் பெரும் பணி உள்ளது. சந்திராயன் 2-க்கான அவர்களது உழைப்பு அளப்பரியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பெண்கள் இருவரின் முழு கட்டுப்பாட்டில் திட்டம் ஒன்று வெற்றிகரமாக நிறைவேற்றியது இதுவே முதல்முறை.

சந்திரயான் 2 -ன் மிஷன் இயக்குநரான ரிது கரிதால், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டத்துக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர், லக்னோ பல்கலையில் விண்வெளித்துறை பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்.டெக் முதுநிலை படிப்பை முடித்தவர்.

ராக்கெட் பெண்மணி என்ற பெருமைக்குரிய பெயருடையவர் ரிது கரிதால். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து 2007ம் ஆண்டு ரிது கரிதால் இஸ்ரோவின் சிறந்த இளைய விஞ்ஞானி என பட்டம் பெற்றவர்.

ரிது கரிதால்

முத்தையா வனிதா, சந்திரயான் 2 திட்ட இயக்குநராவார்.இவர் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை பெற்றவர். 2006ம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி என இந்திய வானியல் கழகம் வனிதாவுக்கு விருதளித்தது.

தரவுகளை கையாளுவதிலும், மின்னணு ஹார்டுவேர் பிரிவில் வல்லவர் வனிதா. முதலில், சந்திரயான் 2 திட்ட இயக்குநராக பணியாற்றுவதற்கு தயக்கம் காண்பித்த வனிதா, பின்னர் உடன் பணிபுரியும் விஞ்ஞானிகளின் ஊக்கத்தின் பேரில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிக்கல்களை கண்டறித்து சீரமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் வனிதா. சந்திரயான் 2 திட்டம் முழுவதும் வனிதாவின் மேற்பார்வையிலேயே நடைபெற்றுள்ளது. வடிவமைப்பு பொறியாளாராக இஸ்ரோவில் தனது பணியை தொடங்கிய வனிதா தான், சந்திரயான் 2 விண்கலத்தை வடிவமைத்த வடிவமைப்பாளர் குறிப்பிடத்தக்கது.

முத்தையா வனிதா

உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே செய்துள்ள சாதனையை இந்தியா செய்ய காரணமாக இருக்கும் இந்த இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.