India

நாடாளுமன்ற கூட்டதொடரை நீட்டிக்க திட்டம் : மாநிலங்களவையில் கூடுதல் பலம் பெற எம்.பி.,களை வளைக்க முயற்சி?

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க அரசின் மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலை 5ல் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, ஜூலை 26ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முத்தலாக் தடை மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றினாலும் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத சூழலே நிலவுகிறது.

முக்கிய மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் ஆய்வு செய்யாமல் அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேநேரம் மாநிலங்களவையில் போதிய ஆதரவு இல்லாததால், குறுக்குவழியில் அந்த மசோதாக்களை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. இதற்காக பிற கட்சி எம்.பி.,க்களை வளைக்க தீவிர முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.