India

பாலியல் வழக்கில் சிக்கி சவுதிக்கு தப்பியவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்த பெண் ஐ.பி.எஸ்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி சவுதியில் உள்ள ரியாத்துக்கு தப்பிய குற்றவாளியை கைது செய்வதற்காக கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் காவல்துறை ஆணையராக உள்ள மெரின் ஜோசப் மற்றும் அவரது காவல்துறை குழு சவுதிக்கு சென்றுள்ளனர்.

கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் குமார் என்ற நபர் சவுதியில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் கடந்த 2017 ஆண்டு 4 மாத விடுமுறைக்காக கொல்லத்திற்கு வந்தபோது, தனது நண்பரின் உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பயம் காரணமாக பெற்றோரிடம் இது தொடர்பாக அந்த 13 வயது சிறுமி எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இறுதியில், ஒருநாள் தனது குடும்பத்தாரிடம் சுனிலின் பாலியல் கொடுமை குறித்து தெரிவிக்க அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள். அதனை அறிந்து சவுதிக்கு தப்பியுள்ளார் சுனில் குமார். பின்னர் சுனிலை பிடிப்பதற்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுத்தது கொல்லம் போலீஸ்.

இதற்கிடையே, கரிக்கோடில் உள்ள அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமி மனம் தாளாமல் தன்னைத் தானே அழித்துக்கொண்டார். முன்னதாக, சுனில் குமாரை சிறுமியின் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்திய குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமாவும் தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து கடந்த மாதம் கொல்லம் மாவட்ட காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற மெரின் ஜோசப் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆராயும்போது சுனில் குமாரின் வழக்கை கையிலெடுத்துள்ளார்.

2017ம் ஆண்டே சுனில் குமாரை பிடிப்பதற்கு இன்டர்போல் துறைக்கு நோட்டீஸ் விடுக்கப்படும் இதுகாறும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு தொடர்பாக இருநாட்டு தரப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல், கேரளாவைச் சேர்ந்த பலர் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு சவுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதுவரை எந்த குற்றவாளிகளும் ஒப்படைக்கப்படவில்லை.

இந்த நிலையில், 2 ஆண்டுகளாக சவுதியில் தஞ்சமடைந்த சுனில் குமார் பிடிபட்டுள்ளதை கேரள போலீசாருக்கு சவுதி போலீஸ் தெரிவித்த நிலையில் குற்றவாளியை பிடிப்பதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து சவுதியில் உள்ள ரியாத் நகருக்கு சென்று கைது செய்துள்ளார் கொல்லம் காவல் ஆணையர் மெரின் ஜோஷப்.