India

ஆர்.டி.ஐ ஆர்வலர் கொலை வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி-க்கு ஆயுள் தண்டனை: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

குஜராத்தின் ஜூனாகத் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் டினு சோலங்கி. இவர்,ஜூனாகத் அருகே உள்ள ‘கிர்’ சிங்கங்கள் சரணாலயத்தில் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை, தகவல் அறியும் சட்ட ஆர்வலரான அமித்ஜேத்வா வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியதுடன், சோலங்கி மீது குஜராத் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே, கடந்த2010-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி, அமித் ஜேத்வா, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் உயர்நீதிமன்றம் முன்பாகவே இந்தபடுகொலை நடந்தது.

அப்போதும் கூட, ஜேத்வா படுகொலைக்கும், டினு சோலங்கிக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி, குஜராத் பா.ஜ.க அரசு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால், உயர்நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

டினு சோலங்கி

அதன் அடிப்படையில் சி.பி.ஐ ஜேத்வா படுகொலை பற்றி விசாரித்து வந்தது, பின்னர் எம்.பி. டினு சோலங்கி உட்பட 7 பேர் மீது 2016-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரனையின் முடிவில், ஜேத்வாவை படுகொலை செய்ததாக டினு சோலங்கி உட்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம். தாவே தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.