India

வாழ்வா ? சாவா? போராட்டத்துக்குத் தயார் : கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி முடிவு

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால், கடந்த சில தினங்களாக அங்கு பரபரப்பு நீடித்து வந்தது.

எப்படியாவது முதல்வர் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கிற நோக்கில் பா.ஜ.க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அதேநேரம் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் இரண்டு தரப்பு வாதத்தையும் கேட்டனர். பின்பு, இந்த வழக்கில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளது. அதனால், இந்த ராஜினாமா கடிதங்களின் மீது தகுதி நீக்கமோ, ராஜினாமா ஏற்போ சபாநாயகர் செய்யக்கூடாது. தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று இன்று நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஆட்சி கவிழுமா ? தொடருமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ல சூழலில், முதல்வர் குமாரசாமியின் இந்த முடிவு அவர் வாழ்வா.. சாவா? போராட்டத்திற்குத் தயாராகிவிட்டார் என்பதையே உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.