India

“புறநானூற்று பாடல் சரியா வராது; இந்தக் குறளைக் கேளுங்க” : நிதியமைச்சருக்கு ஆ.ராசா பதிலடி!

கடந்த வாரம் பட்கெட் தாக்கல் செய்தபோது, சங்கப் புலவர் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பியைப் பாடிய புறநானூற்றுப் பாடலை சுட்டிக்காட்டிப் பேசினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்நிலையில், நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க எம்.பி., ராசா, அரசின் வரி வசூல் பற்றிய திருக்குறளைச் சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தார்.

ஆ.ராசா பேசியதாவது, “இந்த அவையில் 15 பட்ஜெட்டுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு பட்ஜெட்டை பார்த்ததில்லை. இந்திய பொருளாதாரம் வேளாண்மையை அடித்தளமாகக் கொண்டது. ஆனால், கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பொருளாதாரத்தை வளர்ப்பதாக இந்த அரசு நம்புகிறது.

பாண்டிய மன்னனுக்கு புறநானூற்றில் பிசிராந்தையார் சொன்ன அறிவுரையைச் சுட்டிக் காட்டினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். யாரிடம் வரி வசூலிக்க வேண்டும், யாருக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்பதற்கும் புறநானூற்றின் வரிகளுக்கும் தொடர்பில்லை. நிதியமைச்சரின் பிழையை திருத்தி திருக்குறளிலிருந்து சரியான வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு” என்கிறார் திருவள்ளுவர்.

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்க கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணம். அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது.” என்றார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டுமல்லாமல் மக்களவையில் இருந்த அனைவரையுமே அதிர்ச்சியடையச் செய்தது.

மேலும் பேசிய அவர், “பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கியதிலிருந்து 1,424 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி வரியிலிருந்து 7,214 கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.

பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த அரசு இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தோ, குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பது குறித்தோ ஒரு வார்த்தை கூட சொல்லைப்படவில்லை.

கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்ய ஐந்தரை லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கிய அரசு, கல்விக்கடன் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. மாணவர்களின் கல்விக்கடனுக்காக அவர்களது பெற்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கருப்புபணத்தை மீட்டுக் கொண்டுவருவோம், 10 கோடி வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று சொன்ன எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.” எனக் குற்றம்சாட்டினார்.