India

தலைவர் பதவி துறப்பு.. தியேட்டரில் படம்.. டென்ஷன் ஃப்ரீ ராகுல் காந்தி (வீடியோ)

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடு முழுவதும் மக்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மீதான நன்னம்பிக்கையை வளர்க்கத் திட்டமிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது. பா.ஜ.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியும் கூட தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் திட்டவட்டமாக இருந்த ராகுல் இதுகுறித்த விளக்க அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், டெல்லியில் ஒரு திரையரங்குக்குச் சென்ற ராகுல் பரவலாகப் பேசப்பட்டு வரும் ‘ஆர்டிகிள் 15’ இந்தி திரைப்படத்தை மக்களோடு மக்களாகக் கண்டு களித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ராகுல், தனக்கு அருகில் அமர்ந்திருப்பவருடன் உரையாடிக் கொண்டே, பாப்கார்ன் சாப்பிட்டபடி படம் பார்க்கிறார். ராகுலின் எளிமை இளைஞர்களை ஈர்ப்பதாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இளைஞர்கள், எதிர்கால தலைமுறையினரோடு கலந்துரையாடுவதில் விருப்பம் மிகுந்தவரான ராகுல், ஏழை எளிய மக்களிடம் எந்தவித பேதமுமின்றிப் பழகுவார். அவரது நற்பண்பு பலராலுல் போற்றப்படும் நிலையில், மீண்டும் நாடு முழுவதும் மக்களைச் சந்திக்கப்போவது வரவேற்பைப் பெற்றுள்ளது.