India

மும்பை கனமழையால் சுவர் இடிந்து விபத்து: மொத்த குடும்பத்தையே இழந்துதவிக்கும் 8 வயது சிறுமி!

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை கொட்டித் தீர்க்கிறது. முக்கியமாக, மும்பையில் கனமழையால் இதுவரை பலர் உயிரிழந்தும், பல்வேறு வகையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த திங்களன்று நள்ளிரவு சமயத்தில் மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் மற்றும் பிம்ப்ரி படா ஆகிய பகுதிகளில் கன்மழையின் காரணமாக குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில், பிரியா நானாவரே என்ற 8 வயது சிறுமியின் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் அனைவரது மனதையும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

நள்ளிரவு 1 மணிக்கு சுவர் இடிந்ததில் பிரியாவின் தாய், தந்தை, சகோதரிகள் என ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் இடிபாடுகளில் சிக்கினர். சிறுமி பிரியா மட்டும் வேறு இடத்தில் படுத்திருந்ததால் சிறு காயத்துடன் உயிர்பிழைத்தார் என அச்சிறுமியின் மாமா ரங்கேஷ் விட்கர் தெரிவித்தார்.

பின்னர் மீட்புப்படையினர் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட போது, இடிபாடுகளில் சிக்கிய பிரியாவின் சகோதரிகளில் ஒருவரான 15 வயது சிறுமி சஞ்சிதா மட்டுமாவது மீட்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறு வயதிலேயே தனது தாய், தந்தை, சகோதரிகளை சிறுமி பிரியா இழந்து இருப்பது அந்தப் பகுதிவாசிகளிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.