India

நீதிபதிகள் நியமனத்தில் ஏன் சாதி பாகுபாடு? மோடியை கலங்கடித்த நீதிபதியின் கடிதம் 

புதிய நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதிப்பது, தலைமை நீதிபதிகள் மீது சக நீதிபதிகள் புகார், நீதிபதிகள் மீது அதிருப்தி என நீதித்துறையின் மீது தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இவர் நாளைய தினம் ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த கடிதம் நீதித்துறை வட்டாரங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “நீதிபதிகள் நியமனம் செய்வதில், நீதிபதி உறவினர்களுக்குச் சலுகை, சாதி பாகுபாடுகள், பாரபட்சம் பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நீதித்துறையில் தனது 34 வருட அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டே நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது. இதில், சிலருக்குச் சாதகமான முடிவுகளும், நீதிபதிகள் நியமனமும் ரகசியமாக நடைபெறுகிறது. அவர்களை நியமனம் செய்த பிறகு தான் நீதிபதிகளின் பெயர்கள் தெரிய வருகிறது.

தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை (National Judicial Appointments Commission) உங்கள் அரசு கொண்டுவந்த போது, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தங்களது அதிகாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, இந்த சட்டத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து, அதனை ரத்து செய்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.