India

15,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிய தொழில் அதிபர்கள்!

குஜராத் மாநிலம், வதோதரா நகரைச் சேர்ந்த, சந்தேசரா சகோதரர்களால் துவக்கப்பட்டது ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிதின் சந்தேசரா, சேடன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகிய மூவரும் சேர்ந்து போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.15,000 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.5,400 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு அவர்கள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் வெளிநாட்டுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில் மேலும் ரூ.9,000 கோடியை அவர்கள் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா வங்கி, யுகோ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். குஜராத்தை சேர்ந்த சந்தேசரா சகோதரர்கள் 300 போலி நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கி நைஜீரியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அமைக்க பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கிகளில் வாங்கிய கடனை தொழில்சாராத பணிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சந்தேசரா சகோதரர்களும் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சந்தேசரா சகோதரர்களின் இந்த மோசடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த ரூ.11,400 கோடி மோசடியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர்கள் சொத்துக்களை முடக்க அமலக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.