India

“மதத்தின் பெயரால் கொலை செய்பவர்களை எதிர்த்துக் குரல் எழுப்புவோம்” : தயாநிதிமாறன் அதிரடி!

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி 22 வயதான தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை இந்துத்வா கும்பல் கடுமையாகத் தாக்கியது. கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், ஜூன் 22ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

பைக் திருடுபோனதால் சந்தேகத்தின் அடிப்படையில் தப்ரேஸை அடித்து உதைத்த இந்துத்வா கும்பல், அவரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனச் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தி தாக்கியுள்ளனர். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ஜார்கண்ட் மாநில முஸ்லீம் இளைஞர் தப்ரேஸ் கொலை சம்பவத்தை கையில் எடுத்துள்ளார். இது பற்றிப் பேச மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார் தயாநிதி மாறன்.

ஜார்க்கண்ட் கொடூர கொலை சம்பவம் தொடர்பாக, மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மானத்தீன் கீழ் பேசவேண்டும் என மத்திய சென்னை தி.மு.க எம்.பி., தயாநிதி மாறன் நோட்டீஸ் கொடுத்தார். ஆனால், இந்தப் பிரச்னையை ஒத்திவைப்புத் தீர்மானத்தில் எடுக்க சபாநாயகர் ஒப்புதல் வழங்கவில்லை.

ஜார்கண்ட் பிரச்னையை கையில் எடுத்துள்ளது குறித்து நிருபர்கள் தயாநிதி மாறனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாங்கள் தி.மு.க-விலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் மதநல்லிணக்கத்தை நம்புகிறோம். மதத்தின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்து கொலை செய்யும் வெறியர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார்.