India

பாசிசத்தின் பிடி இறுகிக் கொண்டிருக்கிறது : திரிணாமுல் பெண் எம்.பி.,யின் அதிரடிப் பேச்சு

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தனது சிறப்பான முதல் உரையினால் கவனம் பெற்றுள்ளார். பா.ஜ.க-வின் பலத்த கூச்சல்களுக்கிடையே பேசத் துவங்கிய மஹுவா மொய்த்ரா தனது ஆங்கில உரையால் பா.ஜ.க-வை துவம்சம் செய்தார்.

மக்களவையில் அவர் பேசியதாவது, “வரலாற்றின் எந்தப் பக்கத்தில் இருக்க விரும்புகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பை ஆதாரிக்கும் பக்கமா அல்லது அதை சவக்குழிக்குள் புதைக்கும் பக்கமா என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்.

பா.ஜ.க-வினர் “அச்சா தின்” என்று சொல்வார்கள். அவர்கள் கட்டியெழுப்ப விரும்பும் அரசின் மீது சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது என்று கூறுவார்கள். ஆனால், கண்களை அகலத் திறந்தால் மட்டுமே உண்மையைக் காண முடியும். இந்த நாடு எல்லாப் பகுதிகளிலும் சிதைந்திருக்கிறது.

அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டர் உள்ளது. அதில் சொல்லப்பட்ட “மேலோட்டமான தேசியவாதத்தில் மூழ்கி மனித உரிமைகளை அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், ஊடகங்களை கட்டுப்படுத்துதல், மதம்” ஆகிய அத்தனை அறிகுறிகளும் இந்தியாவில் காணப்படுகிறது என எச்சரித்துள்ளார் மஹுவா மொய்த்ரா

அமைச்சர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றதையே காட்ட முடியாதபோது ஏழை மக்கள் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்பதற்கான சரியான சான்றிதழை காட்ட வேண்டுமென வற்புறுத்துவது ஏன் என்று அவர் மோடியைக் கடுமையாக விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

2014 முதல் 2019 வரை பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் வெறுப்பரசியல் கும்பல் நடத்தும் குற்றங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளது.” எனவும் தெரிவித்துள்ளார் மஹுவா மொய்த்ரா. அவர் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம் பா.ஜ.க எம்.பி-கள் தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். அதற்கு அவர், “இந்த அறையில் தொழில்முறை ஹேக்கர்களுக்கு இடமில்லை. சபையை ஒழுங்காக நடத்தவிடுங்கள்” என பதிலடி கொடுத்தார்.