India

அதானியின் கனிமவள சுரங்கத்துக்கு எதிர்ப்பு : போராட்டத்தில் இறங்கிய சத்தீஸ்கர் பழங்குடிகள்!

பிரதமர் நரேந்திர மோடி கார்பபரேட் தொழிலதிபர்களான அம்பானி, அதானி, நிரவ் மோடி, அனில் அகர்வால் போன்றவர்களின் பினாமிகளாகவும், அவர்களின் ஆதரவாளராகவும் இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விமர்சித்தும், குற்றஞ்சாட்டியும் வருகின்றனர்.

அரசு திட்டங்களை இதுபோன்ற கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்து, மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கு தாரைவார்ப்பதையே தனது முழுநேர வேலையாக கொண்டுள்ளது மோடியின் பா.ஜ.க அரசு.

அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பைலடிலா என்ற மலைப்பகுதியில், கனிம வளம் எடுப்பதற்காக அதானி குழுமத்திற்கு சுரங்கம் அமைக்க கடந்த ஆட்சியில் பா.ஜ.க அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இதுமட்டுமில்லாது, இரும்ப்த் தாது எடுப்பதற்காக சுமார் 25 ஆயிரம் மரங்களை அழிக்கவும் திட்டமிட்ட அதானி குழுமம், இதுவரை 10 ஆயிரம் மரங்களை சுரங்கச்சாலை அமைக்க வெட்டியுள்ளனர்.

முன்னதாக 2 சுரங்கம் இதேபகுதியில் உள்ளதால், தற்போது மீண்டும் ஒரு சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த பைலடிலா 13 எண் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பைலடிலா மலைப்பகுதியில் தங்களின் வன தேவதை பித்தோட் ராணி மற்றும் நந்தராஜ் இருப்பதாக நம்புகின்றனர். பழங்குடிகளின் எதிர்ப்புக்கு இதுவே பிரதான காரணமாக உள்ளது.

இதற்காக, அதானியின் சுரங்கத்தை முற்றுகையிடுவதற்காக தேவையான உணவுப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு வில் அம்புடன் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர் பழங்குடியின மக்கள்.