India

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா சிங்கின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூரின் மனுவை,தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2008-ம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரின் மசூதி ஒன்றின் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் பலியாகினர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப்படை போலீசார், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே, நடந்து முடிந்த தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்கூர் வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து பிரக்யாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விலக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 17-ம் தேதி, பிரக்யா சிங் உட்பட ஏழு பேரும் வாரம் ஒருமுறை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ‘எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், டெல்லியில் தங்கியிருப்பது அவசியமாக உள்ளது. மேளூ, உடல்நிலை சரியில்லாததால், அடிக்கடி என்னால் பயணம் செய்யமுடியாது. எனவே, தேர்தலுக்காக விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை நீட்டிக்க வேண்டும்' எனக் கோரி பிரக்யா சிங் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.