India

பேச்சுவார்த்தையில் உடன்பாடு : முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம் !

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும், நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 17-ந் தேதி (இன்று) மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதைதொடர்ந்து, இன்று தலைமை செயலகத்தில் பயிற்சி டாக்டர்களுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பணியிடங்களில் தங்களது பாதுகாப்புக்கு அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும் என்று மம்தாவிடம் டாக்டர்கள் வலியுறுத்தினர். பணியின்போது தங்களுக்கு உள்ள குறைபாடுகளை பற்றியும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கவும், காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியை குறைதீர்ப்பு நடுவராக நியமிக்கவும் மம்தா ஒப்புதல் அளித்தார். இதைதொடர்ந்து, ஒரு வாரமாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக பயிற்சி டாக்டர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று மாலை அறிவித்தனர்.