India
U Turn போடும் ‘வாயு’ புயல்... குஜராத்தை மீண்டும் தாக்க வாய்ப்பு : வல்லுநர்கள் எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இது வாயு புயலாக உருப்பெற்று ஜூன் 13ம் தேதி குஜராத்தின் துவாரகா, வேரவல் இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆகையால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கடலோர காவல்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு என புயல் வருவதற்கு முன்பே மீட்பு பணிகளுக்காக நூற்றுக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், திடீரென வாயு புயல் திசைமாறியதால் குஜராத் மாநிலத்துக்கு புயல் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டதால் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட மக்கள் அனைவரும் தத்தம் குடியிருப்புகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தற்போது, வாயு புயல் மீண்டும் திசை மாறி குஜராத்தை நோக்கி வர உள்ளதாக மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் எம்.ராஜீவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “வலுவிழந்த நிலையில் காணப்பட்ட வாயு புயல் மீண்டும் குஜராத்தின் கடலோரப்பகுதியை நோக்கி வருவதாகவும், இது ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் சூறாவளி புயலாக வலுப்பெற்று கட்ச் பகுதியில் தாக்கக்கூடும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புயல் கரையை கடப்பது குறித்து அதன் வேகத்தை அடிப்படையாகக் கொண்டே தெரிவிக்கப்படும் என்றார். இதனால் குஜராத் மாநிலத்தில் மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!