India

பாஜக வெற்றி: மதத்தை முன்வைத்து செய்த பிரசாரத்தின் பலன் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா, டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், மோடி மற்றும் புதிய மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவுக்கு 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், ஆளுநர்கள் மாநில முதலமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

இது குறித்து பேசிய புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி,

மாநில முதலமைச்சர் என்பதன் அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்டேன் என்றார்.

இதனையடுத்து, நாட்டிலேயே 3வது மிகப்பெரிய கட்சியாக உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்காதது பா.ஜ.கவின் பிரிவு மனப்பான்மையையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது.

மேலும், அரசியல் நாகரிகம் கருதி மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் வெற்றி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, புல்வாமா தாக்குதல் மற்றும் மதங்களை முன்வைத்து அவர்கள் பிரசாரம் மேற்கொண்டதன் பலனாகதான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என நாராயணசாமி சாடியுள்ளார்.