India

முன்வாசலில் தோல்வியுற்றவர்களை பின்வாசலில் ஆட்சி அமைக்க விடுவதா? - ஆசிரியர் வீரமணி கேள்வி!

முன்வாசலில் தோல்வி அடைந்தவர்களை, கொல்லைப்புறம் வழியாக மத்திய அமைச்சராக்குவது, ஆட்சியமைக்க வழிவகுப்பது என அனைத்தும், கழிவுப் பொருட்களை இலையில் பரிமாறுவதற்கு சமம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

மோடி ஆட்சிக்குத் தலைநகரம் ‘‘டெல்லியா - நாக்பூரா?’’

மோடியும், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று மாலை டெல்லியில் பதவியேற்க இருக்கிறது. ஜனநாயகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அனைவரும் தோற்றவர்கள் உள்பட - வாழ்த்துக் கூறுவது மரபு மட்டுமல்ல; அரசியல் நாகரிகமும் ஆகும்.

பிரதமர் தாமோதர நரேந்திரதாஸ் மோடி அவர்களுக்கும், அவரது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவைக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் யாரை சேர்ப்பது? யார் முடிவெடுப்பது?

இதனையடுத்து, அமைச்சரவையில் யாரை சேர்ப்பது? எத்தனை எண்ணிக்கை? யாருக்கு, எந்த இலாகா? என்பதெல்லாம் பொதுவாக நாடாளுமன்ற கட்சித் தலைவரின் (பிரதமரின்) ஏகபோக உரிமை. ஆனால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அது தனிச் சுதந்திரத்துடன் இயங்கும் ஓர் அரசியல் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் அரசியல் வடிவமேயாகும். அதற்கு ஆணைகளும், தாக்கீதுகளும், அதனை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திலிருந்தே வரும். இலாகா ஒதுக்கீடு உள்பட!

இம்முறை தனித்தே பெரும் வெற்றியை பா.ஜ.க. (303) பெற்றிருந்தாலும்கூட, ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆணையை ஏற்றுத்தான் நடக்கவேண்டிய கட்டாயம் உண்டு. முந்நாளில் இதனை லேசாகவோ, மறைமுகமாகவோ ஏற்க மறுத்த பிரதமர், துணைப் பிரதமர், அமைச்சர்கள் லாவகமாகப் புறந்தள்ளப்பட்டோ, ஒதுக்கப்பட்டோ, தோற்கடிக்கப்பட்டோ வந்துள்ளார்கள் என்பது பழைய வரலாறு.

இரட்டை நிர்வாகம்!

இரட்டை நிர்வாகம், அதன் விளைவு - பொறுப்பேற்ற பிரதமர் மோடியின் கவலையும், கடமையும் ஆகும்!

டெல்லி தலைநகரமா? நாக்பூர் முக்கிய தலைநகரமா? என்ற சிக்கலான கேள்வி எழும் ஒரு விசித்திர நிலைப்பாடு தவிர்க்க முடியாத நிலையாகும் - எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் சுதந்திர ஆளுமை வேறு; மற்றொரு தலைமைக்குக் கட்டுப்பட்டே எப்போதும் ஆளுவது என்பது வேறல்லவா? இதன் விளைவு, போக்கு - பொறுத்திருந்து பார்க்கப்படவேண்டிய ஒன்றே!

முன்வாசலில் தோற்றவர்களை பின்வாசல் வழியாக அமர்த்துவதா?

ஜனநாயகத்தின் மற்றொரு அம்சம் முன்வாசலில் படுதோல்வி அடைந்தவர்களை, கொல்லைப்புற - பின்வாசல் மூலம் அமைச்சராக்குவது, ஆட்சியில் அமர்த்துவது ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதாவது, ‘‘கழிவுப் பொருள்களை’’ இலையில் பரிமாறலாமா?

சற்று கீழிறக்கமான ஒரு உதாரணத்துடன் கூற வேண்டுமானால், நாம் உண்ட உணவுகள் உடலில், ரத்த ஓட்டத்தில் சத்துணவாக மாறும்; சக்கைகள் கழிவாக வெளியேறும். அதுபோல, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜனநாயக வெற்றி பெற்றவராவார். அதில் தோல்வி அடைந்தவர்களை மீண்டும் (மாநிலங்களவை மூலம் கொல்லைப்புற வழியில்) கொண்டு வந்து அமைச்சர் பொறுப்புகளில் அமர்த்துவது என்பது கழிவுப் பொருள்களை மீண்டும் இலையில் பரிமாறுவதற்கு ஒப்பாகும் என்பதை ஆளும் தலைவர்கள் - ஜனநாயகத்தில் நன்னம்பிக்கை உடையோர் மறந்திடக் கூடாது!

அவ்வளவு அறிவுப் பஞ்சமா அவர்களது அணியில்? கேட்கமாட்டார்களா, அரசியல் தெளிவுள்ளவர்கள்? தேவை ஆரோக்கியமான அரசியல் மரபு!

‘‘தோற்றவர்களை மாநிலங்களவை வேட்பாளர் ஆக்குவதென்றால், ஒப்புக்கொள்ள மாட்டோம்‘’ என்று தங்கள் வாக்குகளை ‘‘தானம்‘’ கொடுத்து, தோள்மேல் ஏற்றும் கட்சிகளும்கூட ஓர் ஆரோக்கியமான அரசியல் மரபை உருவாக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.