India

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் : ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார், இன்று கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் ஆவணங்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்க அனுமதி அளித்ததாக ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

முறையாக விசாரணை நடத்தப்படாதது குறித்து ராஜீவ் குமாரிடம் விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை, கொல்கத்தா போலீசார் சிறைபிடித்தனர். ராஜீவ் குமாரை விசாரிப்பதை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில், ராஜீவ் குமாரும் பங்கேற்றார்.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. மேலும், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கடந்த வாரம் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் குமாருக்கு அளிக்கப்பட்டிருந்த 7 நாட்கள் முன்ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சிபிஐ. இன்று நடைபெறும் விசாரணைக்குப் பிறகு ராஜீவ் குமார் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.