India

“கங்கையின் மகன் எனக் கூறிக்கொண்டு வந்தார்; ரஃபேல் ஏஜென்டாக வெளியேறுவார்” : சித்து விளாசல்!

2014 மக்களவைத் தேர்தலின்போது தன்னை கங்கையின் மகன் எனக் கூறிக்கொண்ட மோடி, தற்போது ரஃபேல் ஏஜென்ட்டாக வெளியேறப் போகிறார் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சித்து பேசியதாவது :

“ரஃபேல் ஒப்பந்தத்தில் கமிஷன் வாங்கினீர்களா இல்லையா என்பதை மோடியிடம் கேட்க விரும்புகிறேன். நானும் ஊழல் செய்ய மாட்டேன்; மற்றவர்களையும் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என முழங்கினீர்களே... தற்போது இதை வைத்து விவாதம் நடத்துவோம் வருகிறீர்களா” என மோடிக்கு சவால் விடுத்துள்ளார் சித்து.

மேலும் பேசிய அவர், “ஒருவேளை நான் மோடியுடனான இந்த விவாதத்தில் தோற்றால் அரசியலை விட்டே விலகத் தயாராக உள்ளேன்” எனப் பேசியுள்ளார்.

தூய்மை கங்கை திட்டத்தை முன்வைத்து வாரணாசியில் வெற்றிபெற்று பிரதமரான மோடியை விமர்சிக்கும் விதமாக “2014-ல் கங்கையின் மகனாக வந்த மோடி, 2019-ல் ரஃபேல் ஏஜென்ட்டாக அதிகாரத்தை விட்டு வெளியேறப் போகிறார்.” எனவும் தெரிவித்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.