India

கார்ப்பரேட்களுக்கு காடுகளை தாரைவார்க்க பழங்குடிகளை விரட்டும் பா.ஜ.க அரசு!

தங்கள் வெளியேற்றத்தை எதிர்த்து மலைவாழ் மக்களும், பழங்குடியினரும் அரசுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில், வன உரிமை சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சட்ட வரைவை அனுப்பியுள்ளது பா.ஜ.க அரசு.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்டத் திருத்தத்தின்படி, வன அலுவலர்கள் எந்தக் கேள்வியுமின்றி வனத்துக்குள் மக்களைச் சுடும் அதிகாரம் பெறுவார்கள். பழங்குடியினரின் வன வாழ் உரிமையை ரத்து செய்ய அனுமதியளிக்கிறது பா.ஜ.க கொண்டுவரவிருக்கும் இந்தச் சட்டத் திருத்தம்.

மேலும், பழங்குடியினரை வனத்திலிருந்து வெளியேற்றவும் வன அலுவலர்களுக்கு அதிகாரமளிக்கிறது இந்தச் சட்டத்திருத்தம். மக்களை வெளியேற்றிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில்களுக்கு காடுகளை தாரைவார்ப்பதுதான் பா.ஜ.க அரசின் திட்டம்.

வன உரிமைச் சட்டம் கூறுவதுபோல, இந்த வனப்பகுதிகள் காலனித்துவ மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசாங்கங்கள் வனவாசிகளுக்கு இழைத்த வரலாற்று அநீதியால் கைப்பற்றப்பட்டன. அவற்றை அவர்கள் வாழ அனுமதிப்பதுதான் காங்கிரஸ் கொண்டுவந்த வன உரிமைச் சட்டம். இப்போது பா.ஜ.க அரசு மீண்டும் அநீதி இழைக்க விரும்புகிறது. இது இந்தியாவின் இருபது கோடி வனவாசிகளின் மீதான தாக்குதல்.

காங்கிரஸ் கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தை வலுவிலக்கச் செய்யும் பாஜக-வின் முயற்சி நீதிமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், பா.ஜ.க காடுகளில் பெரும் போரை உண்டாக்க நினைக்கிறது. இதற்கு, வனவாசிகளையும், பழங்குடியினரையும் பலியிடத் துடிக்கிறது.