DMK Government

’முதல்வர் குடும்பத்துக்கு மட்டும் வளர்ச்சி’: எடப்பாடியை எதிர்த்து களம்காணும் தி.மு.க.,வின் இளம் வேட்பாளர்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க போட்டியிடும் 173 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து தி.மு.க சார்பில் களமிறங்குகிறார் சம்பத்குமார்.

எம்.சி.ஏ பட்டதாரியான சம்பத்குமார், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் சம்பத்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவிக்கையில்,

“எடப்பாடி தொகுதிக்கு முதல்வர் பழனிசாமி எதுவுமே செய்யவில்லை. 10 ஆண்டுகளாக அவர் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால் முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. எங்கள் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

இதன் காரணமாக அடித்தட்டு மக்கள் முதல் மேல்மட்டத்தினர் வரை அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அறிவிப்பு மட்டும்தான் வருகிறது. எந்தச் செயல்பாடும் இல்லை. இத்தகைய சூழல் எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியைப் பயன்படுத்தி அவர் குடும்பத்தை வளர்த்துக் கொண்டாரே தவிர கட்சிக்காரர்களையும், பொதுமக்களையும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் மீது அதிருப்தி நிலவுவதால் நாங்கள் எளிதாக வெல்வோம்.

எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகளைச் சொன்னாலே நாங்கள் வெற்றிபெறுவோம். கொரோனா காலத்தில் நாங்கள் மக்களுக்குச் செய்த நலத்திட்டங்கள் மூலம் மகத்தான வெற்றி பெறுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 14 தொகுதிகளில் நேரடி போட்டி... பா.ஜ.க-வை மண்ணைக்கவ்வச் செய்யப்போகும் தி.மு.க வேட்பாளர்கள்!