DMK Government
“இந்து மதத்தை வைத்து எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்” : அமித்ஷாவிற்கு மம்தா நேரடி எச்சரிக்கை!
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் வாக்குப்பதிவு தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்தி ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பா.ஜ.க பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகிறது.
குறிப்பாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளை விலைக்கு வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், முக்கிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் சொந்த பலத்தில் களம் காண்கிறார் முதல்வர் மம்தா. அவரை பா.ஜ.க படுத்தும் பாட்டை கண்டு கோபமடைந்துள்ள வேறு மாநிலக் கட்சிகளும், தாமாக முன்வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில்தான் 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியினர் உள்ளிட்ட 291 வேட்பாளர்களின் பட்டியலை மம்தா வெளியிட்டிருந்தார். மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடவிருக்கிறார்.
சமீபத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சுவேந்து சவால் விடுத்தார்.
இந்தச் சவாலை ஏற்று மம்தாவும் நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்து, இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே நேற்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, “எங்களிடம் இந்துத்வா முத்திரையைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்.
நானும் இந்துப்பெண் தான். வீட்டில் இருந்து கிளம்பும்போது எங்கள் கடவுள்களை வணங்கி விட்டுத்தான் வெளியே வருவேன். ராஜஸ்தான் - குஜராத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் இங்கு பிறந்தவர்களை பற்றி பேசுவது கொடுமையானது. அதனைவிட கொடுமை, நான் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதுபோல் கதைகட்டுகிறார்கள்.
என்னுடைய பவானியூர் தொகுதியை ஒருமுறை சென்று பாருங்கள். எவ்வளவு வளர்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று தெரியும். அதேபோல், நந்திகிராம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். ஒரு வீட்டில் கூட வேலை இல்லாதோர் என்ற அவல நிலைமை இருக்காது. கல்வியற்றவர்கள் இருக்கவே மாட்டார்கள். அனைவருக்கும் கல்வி என்பதே எனது லட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!