DMK Government
தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் : லட்சியத்திற்கே முதலிடம் என முத்தரசன் உறுதி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட முன்னணி கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுற்றுள்ளது.
தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்புராயன், மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் கோ.பழனிசாமி - தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், “தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் முடிந்துள்ளது. தொகுதி எண்ணிக்கையை விட லட்சியத்திற்குத்தான் முதலிடம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!